முதற் பக்கம்

சோலைப் பூக்களை

சோலைப் பூக்களைத் தென்றல் தாலாட்டும் - பொன்
மாலை வேளையில் நிலவு முகம் காட்டும் - இந்தக்
காலம் நமதாகும் - இயற்கைக்
கோலம் இனிதாகும்!

குடைவிரித்து நின்றமரம் தலையசைக்கும்
குருவிகளின் கூட்டம் வரச் சம்மதிக்கும்
பாய்ந்துவரும் நதியலையோ சலசலக்கும்
பாறைமீது மோதியபடி கலகலக்கும்

காலம் நமதாகும் - இயற்கைக்
கோலம் இனிதாகும்!

இரைதேடிய பறவைகள் நம் அறைதேடும்
கரைதேடிய நதியலைகள் விரைந்தோடும்
உயரவளர்ந்த தென்னையதில் முகம்பார்க்கும்
இரவுவர வானம் தன் விளக்கணைக்கும்

காலம் நமதாகும் - இயற்கைக்
கோலம் இனிதாகும்!

குனிந்தபுல் நிமிர்ந்துபார்க்கக் காற்றடிக்கும்
நிமிர்ந்துவிட்டு நிலவைப்பார்த்துக் குனிந்துவிடும்
மறைந்து மறைந்து மீண்டும் நிலவு தோன்றிவிடும்
மலர்ந்துவிட்ட அல்லிமலர் வெட்கப்படும்

காலம் நமதாகும் - இயற்கைக்
கோலம் இனிதாகும்!


-உதயகுமார் ஜே.ஆர்.

1 comment: