முதற் பக்கம்

இறைவனின் ஊடகங்கள் - 2

முதற் பகுதி இங்கே 


நீ இறைவனின் ஊடகமாகச் செயல்படுவது உனக்கே தெரிவதில்லை!

ஆம்!

ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைப் பற்றி யோசித்துக் கொண்டே இருப்போம். மனதிற்கேற்ற நல்ல தீர்வு உடனே கிடைத்துவிடுவதில்லை.

அந்த எண்ணத்தை ஒதுக்கி வைத்து விட்டு, ஒரு வேலை விஷயமாக வெளியே செல்கிறோம். வழியில் நண்பர் தென்படுகிறார். பேசுகிறோம். நாம் யோசித்துக் கொண்டிருந்த பிரச்சினையின் தீர்வாக அவர் ஏதோ ஒன்றை பேசிவிட்டுப் போகிறார். 


அவருக்கு ஏதோ ஒன்று. ஆனால் அதுவே நமக்கு தேவையான ஒன்று.

நம் வாழ்க்கையில், இப்படிப்பட்ட சம்பவங்கள் நிறைய நிகழ்வதுண்டு!

இதை ஏதோ தற்செயலாக நடந்தது என்று எண்ணுபவர் உண்டு.

யார் இந்த சம்பவங்களை ஒரு கோர்வைப்படுத்திப் பார்த்துக்கொண்டே இருக்கிறாரோ அவருக்கு அதில் ஓர் ஒற்றுமை இருப்பது தெரியவரும்.
 

இந்த ஒற்றுமையை உன்னிப்பாகக் கவனித்துத் தெரிந்துகொண்டவர்கள் இதைத் தற்செயல் என்று சொல்வதில்லை.

இதே போல், நாம் எந்த தெய்வத்தை வணங்குகிறோமோ, அந்த தெய்வத்தின் பெயர் கொண்ட ஒருவரே நமது தேவையின்போது வந்து உதவிச் செல்வதுண்டு.

முருகக் கடவுளை வழிபடுவோருக்கு, வெவ்வேறு பெயர் கொண்ட எத்தனையோ பேர் இருக்க, செந்தில், சுப்பிரமணியன், குமரன் போன்ற பெயருள்ளவரே பல கட்டங்களில் வந்து செல்வதைக் கவனித்தால் நமக்கே வியப்பாக இருக்கும்.

அவர்கள் நமது செயல்களில் உதவியாக இருப்பர். இல்லாவிட்டால் நமது காரியத்தில் அவரின் முக்கியமான பங்கு இருக்கும்.

இந்த ஒற்றுமை நமக்கு எப்போதும் புலப்படுவதில்லை.

இறைவன் எப்போது உங்களுக்குத் தெரியவேண்டும் என்று நினைக்கிறானோ அப்போது தான் தெரியவரும்.




-உதயகுமார் ஜே.ஆர்.

மூன்றாம் பகுதி...