முதற் பக்கம்

சைவர்களும் அசைவர்களும்

அசைவர்கள் ஏன் அசைவம் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்? சைவர்கள் ஏன் சாப்பிடுவதில்லை?

இதற்கு எத்தனையோ முறையில் காரணங்கள் சொல்லலாம்.

உளவியல் அடிப்படையில் ஒரு விடை:

அசைவ உணவு தயாராகும் செயல்முறையை முன்பாதி பின்பாதி என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்.
  • விலங்கை வதைத்தல் மற்றும் கொல்லுதல்
  • அது வலியால் துடித்தல்
  • அடுத்தடுத்து அது பச்சை மாமிசமாக சமையலறைக்கு வரும் வரை உள்ள விஷயங்கள்
இவை யாவும் முன்பாதி!

பின்பாதி என்பது,

  • உப்பு, மசாலா போன்ற மாமிசத்தின் தன்மையை மாற்றக்கூடிய பொருட்களைச் சேர்த்து சமைத்தல்
  • அதிலிருந்து வரும் வாசம்
  • சாப்பிடும் போது ஏற்படும் சுவை.

உளவியல் ரீதியாக, அசைவர்கள் விஷயத்தில், பின்பாதி மட்டுமே அவர்களின் மூளையில் ஓங்கி (predominant) இருக்கும்.
விலங்குகள் கொல்லப்படுவதையோ அதை சமைக்க ஆரம்பிக்குமுன் செய்யப்படும் தயாரிப்பு வேலைகள் எதையும் அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.
சமைக்கப்பட்ட மாமிசத்தின் சுவை மட்டுமே அவர்கள் நினைவில் கோலோச்சும்!

சைவர்கள் விலங்குகள் கொல்லப்படுவதையோ கொல்லப்படும்போது அது வலியால் துடிப்பதையோ அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை அல்லது நினைத்துப்பார்க்க விரும்புவதில்லை.
மாமிசத்தை உணவுக்காக தயார்செய்யும் செயல்முறைகள் பற்றி அவர்களின் மூளை சிந்திக்கத் தலைப்படுவதில்லை!

முன்பாதியைப் பற்றிய உணர்வு சைவர்களிடமும் பின்பாதியைப் பற்றிய உணர்வு அசைவர்களிடமும் ஓங்கி இருக்கும்.

•••


துளித்துளியாய் சில சிந்தனைகள்


நீ உதவிகள் செய்த நண்பன் உன்னை ஏமாற்றுகிறானா?  
அவன் உனது நட்புக்குத் தகுதியானவன் அல்ல!

***

நீங்கள் யார் யாரிடம் நல்ல உறவு வைத்திருக்கிறீர்களோ அந்த உறவு வட்டம் உங்களைப் பிரதிபலிக்கிறது,

***

பழகியவன் ஏமாற்றும் போது ஏற்படும் வலி, பழகாதவன் ஏமாற்றினால் ஏற்படும் வலியை விட எப்போதும் கூடுதலாகவே இருக்கும்,

***

மனம்விட்டுப் பழகிய நட்புகள் எப்போதும் மனதிலிருந்து அகல்வதில்லை!
அப்படிப் பழகிய நாட்கள் எப்போதும் இனிமையாகவே இருக்கும்!

***

நம்பிக்கைத் துரோகம் - நட்புத் துரோகம் - மித்திரத் துரோகம் - கூடிக் கெடுத்தல் அனைத்தும் ஒன்றே.
 

நம்பிக்கையை ஏற்படுத்திய பின்னரே துரோகத்தை அரங்கேற்ற முடியும்!

***
 
பிறர் நம்மை நினைத்துப் பார்க்க மாட்டார்களா என்று ஒவ்வொரு உள்ளமும் எதிர்பார்க்கிறது!
 
 
வளரும்...

சுபதினம் சுபதினம்

அது 94-ம் ஆண்டு.

ஸ்பிக் நிறுவனத்தின் 25-வது ஆண்டு விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

நிறுவனத்தின் விழாக்களில் இசையமைக்கும் பொறுப்பு செல்வராஜ்குமாரிடம் இருந்தது.

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பே, ஒருநாள் பகல் பணியில் இருக்கும் போது செல்வராஜ்குமார் என்னிடம் வந்தார்,
"தம்பி நம்ம கம்பெனிய பத்தி ஒரு பாட்டு எழுதுறியா? வர்ற ஆண்டு விழாவில் போடப்போறோம்"

ஒருநொடி திகைத்து, நகைத்தேன். "நிஜமாவா?"

"ஆமாப்பா. சீக்கிரம் எழுத ஆரம்பி! எப்ப கிடைக்கும்?"

"அண்ணே கொஞ்சம் டைம் குடுங்க. நான் மொதல்ல நம்ம கம்பெனி வரலாறு நல்லா தெரிஞ்சிக்கணும். அப்பத்தான் எழுத வரும்"

"ஏ என்னப்பா நீ... சரி ஒரு வாரத்தில எழுதிக் குடு!"

அவர் அன்புக் கட்டளை இட்டபின் மிகப்பெரிய பொறுப்பை ஏற்றதுபோல் உணர்ந்தேன்.

ஒரு வாரத்தில் தகவல்களைச் சேர்த்து எழுதிக்கொடுத்தேன். அந்தப் பாடலுக்கு ஒரு கர்நாடக மெட்டமைத்தார்.

ஸ்பிக் நிறுவனத்தின் 25-வது ஆண்டு விழாவின் ஆரம்பப் பாடலாக திறந்தவெளி அரங்கில் அந்தப் பாடல் அரங்கேற்றமானது.


அந்தப் பாடலை எழுதிய விஷயம் ஒரு சில நண்பர்களுக்கே தெரிய, சக நண்பர்களோடு கூட்டத்தில் ஒருவனாக அமர்ந்து ரசித்தேன்.

மேடையில் பாடல் அரங்கேறிய போது, அரங்கம் நிரம்பிய பிரம்மாண்ட கூட்டம். எதிரே இருந்த மேடையில் வாத்தியக் கருவிகளின் நடுவே அமர்ந்து கர்நாடக ராகத்தில் அமைந்த பாடலைப் பாடியபோது, அவரின் கம்பீரக் குரலில் பாடல் உயிர்பெற்றுக் காற்றுமண்டலமே இசையாலும் பாடலாலும் நிரம்பியது! அந்தப் பாடல் இதோ!



சுபதினம் சுபதினம் சுபதினமே  - இந்த
நாளேதான் நமக்கு சுபதினமே!
சபைதனில் வந்துள்ள அனைவருக்கும்
எங்கள் பணிவான வந்தனமே!

மாபெரும் நிறுவன சரித்திரமொன்றை
பாடிச் செல்லவே வந்தனம்!
பாருக்குள் பாருங்கள் ஓங்கி வளர்ந்திடும்
ஸ்பிக்கெனும் நமது நிறுவனம்!

                                                              (சுபதினம்)
 
இருபத்தி ஐந்து ஆண்டுக்கு முன்பு
இருந்தது இங்கொரு முட்காடு
திடமனம் கொண்ட சிதம்பரம் ஐயா
அடிக்கல் ஒன்றை அமைத்தாரே!

எழுபத்து மூன்றில் கட்டுமானப்பணி
நடந்தது நாட்கள் கடந்தது
எழுபத்து நான்கில் எழுபத்து ஐந்தில்
சோதனை ஓட்டம் நடந்தது

நடந்து முடிந்ததும் பூமியைத்தொட்டது
முதல் மணிமுத்து யூரியா!
தாவர இனமே புத்துயிர் பெற்றது
தரணியே பயன் பெற்றது!
                                                              (சுபதினம்)

எழுபத்து ஐந்தில் இரண்டாம் பாகம்
கட்டுமானப் பணி தொடர்ந்தது
எழுபத்து ஆறில் டிஏபி எனும்
தாவர உணவு பிறந்தது!

ஆலைப்பணியில் இருக்கின்ற பேருக்கு
நகரியம் ஒன்று அமைந்தது
நீச்சல் குளமும் கோவிலும் அரங்கமும்
ஜிம்கானாவும் வளர்ந்தது!

மருத்துவமனையும் வங்கியும் பள்ளியும்
கடைகளும் கொண்டது நகரியம்
பெருந்தவமிக்கும் மாமுனி கண்டால்
தவமே துறந்திடும் அதிசயம்!
                                                              (சுபதினம்)
 

-உதயகுமார் ஜே.ஆர்.

இறைவனின் ஊடகங்கள் - 2

முதற் பகுதி இங்கே 


நீ இறைவனின் ஊடகமாகச் செயல்படுவது உனக்கே தெரிவதில்லை!

ஆம்!

ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைப் பற்றி யோசித்துக் கொண்டே இருப்போம். மனதிற்கேற்ற நல்ல தீர்வு உடனே கிடைத்துவிடுவதில்லை.

அந்த எண்ணத்தை ஒதுக்கி வைத்து விட்டு, ஒரு வேலை விஷயமாக வெளியே செல்கிறோம். வழியில் நண்பர் தென்படுகிறார். பேசுகிறோம். நாம் யோசித்துக் கொண்டிருந்த பிரச்சினையின் தீர்வாக அவர் ஏதோ ஒன்றை பேசிவிட்டுப் போகிறார். 


அவருக்கு ஏதோ ஒன்று. ஆனால் அதுவே நமக்கு தேவையான ஒன்று.

நம் வாழ்க்கையில், இப்படிப்பட்ட சம்பவங்கள் நிறைய நிகழ்வதுண்டு!

இதை ஏதோ தற்செயலாக நடந்தது என்று எண்ணுபவர் உண்டு.

யார் இந்த சம்பவங்களை ஒரு கோர்வைப்படுத்திப் பார்த்துக்கொண்டே இருக்கிறாரோ அவருக்கு அதில் ஓர் ஒற்றுமை இருப்பது தெரியவரும்.
 

இந்த ஒற்றுமையை உன்னிப்பாகக் கவனித்துத் தெரிந்துகொண்டவர்கள் இதைத் தற்செயல் என்று சொல்வதில்லை.

இதே போல், நாம் எந்த தெய்வத்தை வணங்குகிறோமோ, அந்த தெய்வத்தின் பெயர் கொண்ட ஒருவரே நமது தேவையின்போது வந்து உதவிச் செல்வதுண்டு.

முருகக் கடவுளை வழிபடுவோருக்கு, வெவ்வேறு பெயர் கொண்ட எத்தனையோ பேர் இருக்க, செந்தில், சுப்பிரமணியன், குமரன் போன்ற பெயருள்ளவரே பல கட்டங்களில் வந்து செல்வதைக் கவனித்தால் நமக்கே வியப்பாக இருக்கும்.

அவர்கள் நமது செயல்களில் உதவியாக இருப்பர். இல்லாவிட்டால் நமது காரியத்தில் அவரின் முக்கியமான பங்கு இருக்கும்.

இந்த ஒற்றுமை நமக்கு எப்போதும் புலப்படுவதில்லை.

இறைவன் எப்போது உங்களுக்குத் தெரியவேண்டும் என்று நினைக்கிறானோ அப்போது தான் தெரியவரும்.




-உதயகுமார் ஜே.ஆர்.

மூன்றாம் பகுதி...