முதற் பக்கம்

இறைவனின் ஊடகங்கள்-1



வாழ்க்கையில் எத்தனையோ பேரை நாம் சந்திக்கிறோம். மனதில் உள்ளதைப் பேசுகிறோம், சிரித்து மகிழ்கிறோம்.

இவற்றை நம் இஷ்டப்படியே செய்கிறோம்.

அதே சமயம், ஒருவரின் கைகளைப் பற்றிக் கொள்ளும் போது பேசாமலேயே நமது நேசத்தை சொல்லிவிடுகிறோம்.

இங்கே வார்த்தைகள் இல்லை. நமது கைகளும் முகபாவமும் மொத்த உடலும் சேர்ந்து பேசுகின்றன.

பல நேரங்களில் கண்களும் புன்னகையுமே பேசுகின்றன.

நம் விருப்பத்தோடு நாம் நினைத்தபோதெல்லாம் பேசினாலும், நமது முயற்சியே இல்லாமல் எப்போதும் இந்த உலகத்திற்கு தகவல் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். ஆம், அது உடலின் மொழி!

இதில் புதுமையாக என்ன இருக்கிறது?

நீங்கள் நண்பரோடு பேசுகிறீர்கள். பேசுகின்ற வார்த்தைகளின் அர்த்தத்திற்கும் மேலாக ஒரு விஷயம் அவரின் மனதில் தோன்றுமானால் அது உங்களின் முயற்சியால் ஏற்படவில்லை!

நீங்கள் பேசிய பேச்சின் ஒரு வார்த்தையோ உங்களின் உடல் அசைவோ கூட மென்மேலும் அவருக்குத் தகவலைச் சொல்லலாம்.

சமயங்களில், சட்டையின் நிறமோ நெற்றியில் இட்டுக்கொண்ட திலகத்தின் வடிவமோ கூட இதைச் செய்து விடுகிறது.

ஆனால் உங்களின் மூலமாக அவருக்குத் தகவல் செல்கிறது!

நீங்களாகக் கொடுக்கவில்லை. அவராக எடுக்கவில்லை.
அந்த சமயத்தில் நீங்கள் ஊடகமாகி விடுகிறீர்கள்

இறைவன் நம்மிலிருந்து பிறருக்கு ஏதோ ஒன்றை உணர்த்திக் கொண்டே இருக்கிறார்.

நாம் எப்போதும் இறைவனின் ஊடகமாகவே இருக்கிறோம், நம்மை அறியாமலேயே!

நல்ல விஷயங்களைத் தரும் ஊடகமாக நாம் இருந்தால் மிக்க மகிழ்ச்சியே!

-உதயகுமார் ஜே.ஆர்.

இரண்டாம் பகுதி...


 

புத்தகங்கள்


வார்த்தைகள்
சப்தமில்லாமல் சந்தித்துக்கொள்ளும்
நந்தவனம்!

காலம் தன் வரலாற்றை
வசதியாக வரைந்துகொள்ள
எடுத்துக்கொள்ளும்
சாதனைச் சாதனம்!

அறிவுப் பரிணாமத்தின்
அச்சுப் பதிவு!

எழுத்துக்கள் வரிசைகளில்
கருத்துக்களோ குவியல்களில்!

எத்தனைமுறை கேட்டாலும்
சலிப்படையாமல்
திரும்பத் திரும்ப
கற்பிக்கும் ஆசான்!

இறந்த பின்னாலும்
எழுதியவன் பேசும்
அற்புத ஊடகம்!

ஆதியில்
ஓலையே தாளானது
பாதியில்
காகிதம் தாளானது
மீதியில்
மின்திரையே தாளானது!

எந்த வடிவிலும்
சிந்தையின் பதிவுகளை
தாள்களின் தொகுத்தால்
புத்தகமே!

எண்ணங்களைப் பார்க்கமுடியுமா?
புத்தகங்களைப் பாருங்கள்!

அது
வார்த்தைகள்
சப்தமில்லாமல் சந்தித்துக்கொள்ளும்
நந்தவனம்!


உதயகுமார் J.R.

தென்றல் மாத இதழில் பிப்ரவரி 2011-ல் கவிதைப்பந்தல் பகுதியில் வெளியானது.






சிறுவர் பாடல்

கலிஃபோர்னியா தமிழ்க் கழக ஆண்டுவிழாவில் தொடக்கப் பாடலாக பள்ளிச் சிறுவர்களால் பாடப்பட்டது.


பல்லவி:

அன்னை பூமியை விட்டுப் பறந்தோம்
ஆயிரமாயிரம் தொலைவு கடந்தோம்
அன்னிய பூமியில் காலடி வைத்தோம் - கை
பின்னிய படியே நட்புகள் சேர்ந்தோம்!

சரணம் 1:

அடுத்தவர் மண்ணில் வசித்து வந்தாலும்
அன்னையின் மொழியில் ஆர்வம் கொண்டோம்
தொன்னூற் றொன்பதில் ஈரைந்து பேருடன்
திண்ணை போலொரு பள்ளியைக் கண்டோம்!

விண்ணை முட்டும் விமானம் போலே
எண்ணம் இன்றோ ஆயிரம் மேலே!

சரணம் 2:

ஞாயிறு தோறும் தமிழைப் படித்து
ஞாயிறு போலே அறிவில் சிறப்போம்
தாய்களும் சேய்களும் கற்றுச் செல்லும்
இந்தப் பள்ளியும் ஆலயம் என்போம்

அறைகளில் துளிர்விடும் செடிகள் அல்ல
ஆலமரங்கள் நாங்கள் என்போம் !

உதயகுமார் J.R.

தமிழும் நாமும்

கலிஃபோர்னியா தமிழ்க் கழகத்தின் ஆண்டு விழாவிற்காக எழுதிய பாடல் இது.

கர்நாடக இசைப் பாடகர் காயத்ரி சத்யா அவர்கள் பாடி சிறுவர்களுக்குப் பயிற்சி கொடுத்து அரங்கேற்றிய பாடல். இந்தப்பாடலைப் பெற்றுப் பயிற்சிக்கு ஆவன செய்த கவிதா செந்தில்குமாருக்கு என் நன்றிகளோடு...

காயத்ரி சத்யா அவர்கள் பாடிக் கொடுத்த ஒலி வடிவம் இந்த இணைப்பில் கேட்கலாம்.

ஞாயிறு என்றால் தமிழ்ப்பள்ளி !
திங்கள் முகமே வா துள்ளி !
செவ்வாய் திறந்து தமிழ்பேசு !
சொற்கள் சிறுசிறு பட்டாசு !

அறிவில் புதனாய் ஒளிவீச
கல்வி யாழமும் கைகூட
கண்டோம் இங்கொரு தமிழ்ப்பள்ளி !
காணக் கிடைக்கா விடிவெள்ளி !


-உதயகுமார் JR
மே 2010
கலிஃபோர்னியா தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா