வாழ்க்கையில் எத்தனையோ பேரை நாம் சந்திக்கிறோம். மனதில் உள்ளதைப் பேசுகிறோம், சிரித்து மகிழ்கிறோம்.
இவற்றை நம் இஷ்டப்படியே செய்கிறோம்.
அதே சமயம், ஒருவரின் கைகளைப் பற்றிக் கொள்ளும் போது பேசாமலேயே நமது நேசத்தை சொல்லிவிடுகிறோம்.
இங்கே வார்த்தைகள் இல்லை. நமது கைகளும் முகபாவமும் மொத்த உடலும் சேர்ந்து பேசுகின்றன.
பல நேரங்களில் கண்களும் புன்னகையுமே பேசுகின்றன.
நம் விருப்பத்தோடு நாம் நினைத்தபோதெல்லாம் பேசினாலும், நமது முயற்சியே இல்லாமல் எப்போதும் இந்த உலகத்திற்கு தகவல் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். ஆம், அது உடலின் மொழி!
இதில் புதுமையாக என்ன இருக்கிறது?
நீங்கள் நண்பரோடு பேசுகிறீர்கள். பேசுகின்ற வார்த்தைகளின் அர்த்தத்திற்கும் மேலாக ஒரு விஷயம் அவரின் மனதில் தோன்றுமானால் அது உங்களின் முயற்சியால் ஏற்படவில்லை!
நீங்கள் பேசிய பேச்சின் ஒரு வார்த்தையோ உங்களின் உடல் அசைவோ கூட மென்மேலும் அவருக்குத் தகவலைச் சொல்லலாம்.
சமயங்களில், சட்டையின் நிறமோ நெற்றியில் இட்டுக்கொண்ட திலகத்தின் வடிவமோ கூட இதைச் செய்து விடுகிறது.
ஆனால் உங்களின் மூலமாக அவருக்குத் தகவல் செல்கிறது!
நீங்களாகக் கொடுக்கவில்லை. அவராக எடுக்கவில்லை.
அந்த சமயத்தில் நீங்கள் ஊடகமாகி விடுகிறீர்கள்
இறைவன் நம்மிலிருந்து பிறருக்கு ஏதோ ஒன்றை உணர்த்திக் கொண்டே இருக்கிறார்.
நாம் எப்போதும் இறைவனின் ஊடகமாகவே இருக்கிறோம், நம்மை அறியாமலேயே!
நல்ல விஷயங்களைத் தரும் ஊடகமாக நாம் இருந்தால் மிக்க மகிழ்ச்சியே!
-உதயகுமார் ஜே.ஆர்.
இரண்டாம் பகுதி...
No comments:
Post a Comment