முதற் பக்கம்

இலையுதிர்காலக் கனிகள்



ஒவ்வொரு வாழ்வும் ஒவ்வொரு திசையில்
ஓய்விலாமலே செய்கிற பயணம் !
எவ்விதம் முடியும் எங்கே முடியும்
ஒவ்வொரு நெஞ்சும் கொள்வது சலனம் !

போகும் பாதையில் காண்பவர் யாரும்
சேரும் வரையில் வருவதுமில்லை !
வருபவர் யாரும் இன்னொரு திசையில்
வருவார் என்பது நிச்சயமில்லை !

நிச்சயம் இல்லாப் பொழுதுகள் மட்டும்
நித்தம் நித்தமும் பனியாய்க் கரையும் !
நித்தியமில்லாக் காட்சிகள் யாவும்
நீரில் கோலம் நெருப்பில் தாளம் !

இனியொரு சங்கமம் எங்கே என்பது
இலையுதிர்க்காலக் கனிபோல் தோன்றும் !
இனிமைப் பொழுதுகள் என்று வருமோ
எண்ணி எண்ணியே இளகிடும் உள்ளம் !

பழகிய வரையில் உத்தம நெஞ்சும்
விலகிய பொழுதில் கொட்டிய அன்பும்
வாழ்வோ ஏட்டில் எழுதிக்கொள்ளும் !
வாழும் நாட்களின் அழியாச் செல்வம் !


                                                                       உதயகுமார் JR



செப்டம்பர் 2008-ல் தென்றல் மாத இதழில் வெளியானது.
                                                                      
                                                                      

சரணாலயம்


தென்றல் மாத இதழில்  ஆகஸ்ட் 2010-ல் வெளியானது.
தென்றல் இணையதளத்தில் சரஸ்வதி தியாகராஜன் அவர்கள் கொடுத்த ஒலி வடிவம் இங்கே.


மயிலுக்கு மலைகளில் சரணாலயம் - சின்னக்
குருவிக்கு மரங்களில்  சரணாலயம்
மானுக்கு வனங்களில்  சரணாலயம் - இந்த
மனதுக்கு எவ்விடம்  சரணாலயம் ? 


தவழ்கின்ற பருவத்தில் யாருக்குமே
தாய்மடி ஒன்றே சரணாலயம் !
விளையாடும் தருணத்தில் யாராகிலும்
கேளிக்கை ஒன்றே  சரணாலயம் !

நேசிக்கும் நேரத்தில் நெஞ்சத்திற்கு
நெருங்கிய இதயங்கள்  சரணாலயம் !
அலைபாயும் நெஞ்சுக்கு இடமில்லையே !
அதற்கென்று ஏதொரு சரணாலயம் ?

துடிக்கின்ற நெஞ்சுக்கு இரவுகளில்
துயில்கின்ற இடங்களே சரணாலயம் !
அழுகின்ற நேரத்தில் துன்பம் வெல்ல
ஆறுதல் தருமிடம் சரணாலயம் !

புகழ்கொள்ளும் பொழுதினில் நெஞ்சத்திற்கு
புவிசூழ்ந்த வானமே சரணாலயம் !
கணத்திற்கு கணம்மாறும் உள்ளத்திற்கு
கண்டதுண்டோ யாரும் சரணாலயம்?




உதயகுமார் JR