ஒவ்வொரு வாழ்வும் ஒவ்வொரு திசையில்
ஓய்விலாமலே செய்கிற பயணம் !
எவ்விதம் முடியும் எங்கே முடியும்
ஒவ்வொரு நெஞ்சும் கொள்வது சலனம் !
போகும் பாதையில் காண்பவர் யாரும்
சேரும் வரையில் வருவதுமில்லை !
வருபவர் யாரும் இன்னொரு திசையில்
வருவார் என்பது நிச்சயமில்லை !
நிச்சயம் இல்லாப் பொழுதுகள் மட்டும்
நித்தம் நித்தமும் பனியாய்க் கரையும் !
நித்தியமில்லாக் காட்சிகள் யாவும்
நீரில் கோலம் நெருப்பில் தாளம் !
இனியொரு சங்கமம் எங்கே என்பது
இலையுதிர்க்காலக் கனிபோல் தோன்றும் !
இனிமைப் பொழுதுகள் என்று வருமோ
எண்ணி எண்ணியே இளகிடும் உள்ளம் !
பழகிய வரையில் உத்தம நெஞ்சும்
விலகிய பொழுதில் கொட்டிய அன்பும்
வாழ்வோ ஏட்டில் எழுதிக்கொள்ளும் !
வாழும் நாட்களின் அழியாச் செல்வம் !
உதயகுமார் JR செப்டம்பர் 2008-ல் தென்றல் மாத இதழில் வெளியானது. |
இலையுதிர்காலக் கனிகள்
சரணாலயம்
| தென்றல் மாத இதழில் ஆகஸ்ட் 2010-ல் வெளியானது. தென்றல் இணையதளத்தில் சரஸ்வதி தியாகராஜன் அவர்கள் கொடுத்த ஒலி வடிவம் இங்கே. மயிலுக்கு மலைகளில் சரணாலயம் - சின்னக் குருவிக்கு மரங்களில் சரணாலயம் மானுக்கு வனங்களில் சரணாலயம் - இந்த மனதுக்கு எவ்விடம் சரணாலயம் ? தவழ்கின்ற பருவத்தில் யாருக்குமே தாய்மடி ஒன்றே சரணாலயம் ! விளையாடும் தருணத்தில் யாராகிலும் கேளிக்கை ஒன்றே சரணாலயம் ! நேசிக்கும் நேரத்தில் நெஞ்சத்திற்கு நெருங்கிய இதயங்கள் சரணாலயம் ! அலைபாயும் நெஞ்சுக்கு இடமில்லையே ! அதற்கென்று ஏதொரு சரணாலயம் ? துடிக்கின்ற நெஞ்சுக்கு இரவுகளில் துயில்கின்ற இடங்களே சரணாலயம் ! அழுகின்ற நேரத்தில் துன்பம் வெல்ல ஆறுதல் தருமிடம் சரணாலயம் ! புகழ்கொள்ளும் பொழுதினில் நெஞ்சத்திற்கு புவிசூழ்ந்த வானமே சரணாலயம் ! கணத்திற்கு கணம்மாறும் உள்ளத்திற்கு கண்டதுண்டோ யாரும் சரணாலயம்? உதயகுமார் JR |
Subscribe to:
Comments (Atom)

