வார்த்தைகள்
சப்தமில்லாமல் சந்தித்துக்கொள்ளும்
நந்தவனம்!
காலம் தன் வரலாற்றை
வசதியாக வரைந்துகொள்ள
எடுத்துக்கொள்ளும்
சாதனைச் சாதனம்!
அறிவுப் பரிணாமத்தின்
அச்சுப் பதிவு!
எழுத்துக்கள் வரிசைகளில்
கருத்துக்களோ குவியல்களில்!
எத்தனைமுறை கேட்டாலும்
சலிப்படையாமல்
திரும்பத் திரும்ப
கற்பிக்கும் ஆசான்!
இறந்த பின்னாலும்
எழுதியவன் பேசும்
அற்புத ஊடகம்!
ஆதியில்
ஓலையே தாளானது
பாதியில்
காகிதம் தாளானது
மீதியில்
மின்திரையே தாளானது!
எந்த வடிவிலும்
சிந்தையின் பதிவுகளை
தாள்களின் தொகுத்தால்
புத்தகமே!
எண்ணங்களைப் பார்க்கமுடியுமா?
புத்தகங்களைப் பாருங்கள்!
அது
வார்த்தைகள்
சப்தமில்லாமல் சந்தித்துக்கொள்ளும்
நந்தவனம்!
உதயகுமார் J.R.
தென்றல் மாத இதழில் பிப்ரவரி 2011-ல் கவிதைப்பந்தல் பகுதியில் வெளியானது.

No comments:
Post a Comment