முதற் பக்கம்

மின்னல்


தென்றல் மாத இதழில் ஜூன் 2015-ல் கவிதைப்பந்தல் பகுதியில் வெளியானது. சரஸ்வதி தியாகராஜன் அவர்கள் கொடுத்த ஒலிவடிவம் இங்கே.

       
இது
இயற்கை தரும்
இலவச மின்சாரம்

அது
வழங்கும் தருணமோ
மழைக்கால ரகசியம்

அத்தனை ஆற்றலையும்
கொள்ளவோ கலனில்லை

•••

ஆக்க முடியாதது

கட்டிடங்களின்
இடிதாங்கிகளில்
உச்சிக் கம்பிகளில் அகப்படும்

•••

வானம்
தனது கைரேகைகளை
யாரிடம் காட்டுகிறதோ?

•••

வெளிச்ச வலைவீசி
யாரையேனும்
சிறைப்பிடிக்கப் பார்க்கிறதா?

•••

அங்கே என்ன
ஆகாயம் பிளக்கிறதா?
இல்லை
இருட்டு வெளி உடைபடுகிறது!

•••

மழைநாட்களில்
ஒளிவிழாத காடுகளில்
ஊடுருவிப் பார்க்கிறது
விண்ணகத்துக் காவல்!



உதயகுமார் JR










உங்களில் ஒருவன்


தீர்ந்துபோன சனியும் ஞாயிறும்
திரும்பத் திரும்ப வரும் என்றே

தீராத வேட்கையில்
தூக்கம் கலைத்து

கண்களில் தேங்கிய
கனவைத் தொலைத்து

படுக்கை விடுத்துத்
திங்களைத் தொடுவோரில்...
                           உங்களில் ஒருவன்

திங்கள் முதல் வெள்ளி வரை
விடியல் முதல் மாலை வரை

கணினிகளின் திரைகளுக்கே

கண்களை ஒப்படைத்து

மூளைக்கும் விரல்களுக்கும்
களைக்கும் வரை பளுகொடுத்து

மென்பொருளில் மேய்கின்ற
ஜனத்திரள்களில்...
                          உங்களில் ஒருவன்