முதற் பக்கம்

முதல் பாடல்


என் மூத்த நண்பர் அண்ணன் செல்வராஜ்குமாரும் நானும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்தோம். 


அந்த நிறுவனத்தின் குடியிருப்பில் நிறைய சங்கங்கள் இருந்தன. அவர் அங்குள்ள கலாச்சாரக் குழுவின் பிரதான இசைக்கலைஞர்களில் ஒருவராக இருந்ததால், அதன் நிகழ்ச்சிகளில் இசையமைப்பது அவரும் அவருடைய குழுவும் தான்.

காலை, மதியம் மற்றும் இரவுப் பணிநேரம் என மூன்று மாற்று முறைகள் நடைமுறையில் இருந்த அங்கு, ஒருநாள் இரவுப் பணியில் அவரும் நானும் வந்து அமர்ந்தோம்.

இரவுப் பணியில் அவ்வப்போது செய்யவேண்டிய வேலைகளை செய்தபின் கிடைக்கும் மிச்ச நேரத்தில், சிலர் தொழில்நுட்பப் புத்தகங்கள் படிப்பதுண்டு.
பகுதிநேரப் படிப்பு மேற்கொண்டவர்கள் படிப்பதும் குறிப்பெடுப்பதுமாக இருப்பர். இரவு நேரமல்லவா? நேரமும் போகவேண்டும் ஆனால் அது பயனுள்ள வகையில் போகவேண்டும்.

கட்டுப்பாட்டு அறைக்கு வெளியிலிருந்து, 'ஜோ' வென்ற மெல்லிய சத்தம் உள்ளே ஊடுருவிக் கொண்டிருக்க அந்த இரவின் நிமிடங்கள் நகர்ந்து கொண்டிருந்தபோது, மெதுவாக தன் கைப்பையிலிருந்து ஒரு நோட்டுப்புத்தகத்தை எடுத்து விரித்தார் அண்ணன் செல்வராஜ்குமார்.

அதில் இசைக்குறிப்புகள் எழுதப்பட்டிருந்தன. சமீபத்தில் வெளியான பாடலுக்கு இசைக்குறிப்புகளை மெதுவாக அழுத்தந் திருத்தமாக எழுதத் தொடங்கினார்.

அவ்வப்போது அந்தப் பாடலின் மெட்டை முணுமுணுத்துக் கொண்டே விரல்களை விட்டு எண்ணியபடி இருந்தார்.

அவர் இசைக்குழுவின் ஒரு பிரதான உறுப்பினர் என்பதை நான் அறியாத நேரம் அது.

அப்போது ஒரே மேஜையில் அருகருகே அமர்ந்திருந்த எங்களுக்குள் நடந்த சிறு உரையாடல்:

நான், "அண்ணே, நோட்ஸ் எல்லாம் எழுதுறீங்க. மியுசிக் கத்துக்கிறீங்களா?"

அதற்கு அவர், "தம்பீ. பாட்டுக் கச்சேரிக்கு போயிருக்கியா?"

"ஆமா போயிருக்கேன்".

"கீ போர்டு கிடார் வாசிக்கிறவங்க இதை வச்சித்தான் வாசிப்பாங்க".

"அப்போ நீங்க கீ போர்டு வாசிப்பீங்களா?"

"அட என்னப்பா நீ...  நம்ம கச்சேரிக்கு வர்றியா? அடுத்த வாரம் ஜிம்கானாவுக்கு வா!"

அப்போது தான் இவர் கச்சேரியில் கீ போர்டு வாசிப்பவர் என்று தெரிந்துகொள்கிறேன்.

அந்த தருணத்தில் நான் பத்திரிகைகளில் சில கட்டுரைகள் கவிதைகள் எழுதியிருப்பதாக மெதுவாக ஆரம்பித்தேன்.

அவர், "ஏ கவிதை எல்லாம் எழுதுவியா? அப்போ பாட்டு?"

அதற்கு நான், "பாட்டு....இதுவரைக்கும் எழுதினதில்ல. ஆனா முயற்சி பண்ணலாம்"

"எங்கே ஒரு பாட்டு எழுது பார்க்கலாம்."

நான் தயங்கிக் கொண்டே, "மெட்டுப் போடுவீங்களா? ஒரு மெட்டுக் குடுத்தா சுலபமா இருக்கும். எதைப்பத்தி எழுதுறது?"

"நீ மொதல்ல எழுது. எதைப்பத்தி வேணும்னாலும் எழுது. பார்க்கலாம்".

நான் சிந்திக்க ஆரம்பித்தேன். இது ஓர் அழகான பரீட்சை. எனக்கு என்ன தெரியும் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்.

இயற்கையைப் பற்றி எழுதினால் என்ன? மனதில் காட்சிகள் விரிகின்றன.

எழுத ஆரம்பித்தேன்.

சோலைப் பூக்களைத் தென்றல் தாலாட்டும் - பொன்
மாலை வேளையில் நிலவு முகம் காட்டும் - இந்தக்
காலம் நமதாகும் - இயற்கைக்
கோலம் இனிதாகும்

அந்தத் தாளை அவருக்குத் தெரியுமாறு அவர் பக்கம் நகர்த்தினேன்.

படித்துப் பார்த்து விட்டு, "நல்லா எழுதியிருக்கியே...இதைப் பல்லவியா வச்சிக்கலாம்".
மெதுவாக மெட்டுப் போட்டுப் பார்த்தார்,

மேஜையில் இலேசாகத் தாளம் போட்டுக்கொண்டே, "ஏ தம்பி! அப்படியே சரணம் இன்னும் ரெண்டு பத்தி எழுது! "

நடந்து கொண்டே மனதில் காட்சி விரித்துக் கொண்டேன். ஒவ்வொரு வரியாக மனதில் தோன்றத் தோன்ற கோர்வைப் படுத்திக்கொண்டே வந்தேன்.

நடந்துகொண்டே மிதந்துகொண்டு இருந்தேன்.

அந்த இரவிலேயே அந்தப் பாடலை எழுதி முடித்தேன்.


அதுதான் இந்தப் பாடல்: முதல் பாடல் !


-உதயகுமார் ஜே.ஆர்.

No comments:

Post a Comment