முதற் பக்கம்

தேசம் எந்தன் தேசம்

ஒருமுறை செல்வராஜ்குமார் அவர்கள் என்னிடம் வந்து, "தம்பீ தேசபக்திப் பாடல் ஒண்ணு எழுதுறியா? ரெண்டு வாரத்தில ரெக்கார்டிங் பண்ணணும்."

அதற்கு நான் யோசித்துக்கொண்டே, "ரெக்கார்டிங்கா? எங்கேண்ணே?"


அவர், "திருநெல்வேலி ரேடியோ ஸ்டேஷனுக்காக ஒரு சான்ஸ் கெடச்சிருக்கு. நம்ம ஸ்கூல் புள்ளைங்கதான் பாடப் போறாங்க. எப்போ எழுதித் தர்றே?"


"ஒரு வாரம் டைம் குடுங்க. முயற்சி பண்றேன்."


"ஒரு வாரம் எல்லாம் டைம் இல்ல. ரெண்டு நாள்ல குடுக்குற!"

அன்றைய ஒரு மாலைப் பொழுதில் ஸ்பிக் நகர குடியிருப்பில் எனக்கு ஒதுக்கிஇருந்த வீட்டில் அமர்ந்து சிந்திக்க ஆரம்பித்தேன்.
இரண்டு நாட்களில் எழுதிக் கொடுத்தேன். மெட்டமைத்தார். அடுத்த வாரம் திருநெல்வேலி வானொலியில் தேசபக்திப் பாடல் பகுதியில் ஒலிபரப்பானது இந்தப்பாடல்!

 

* * *

தேசம் எந்தன் தேசம்
பழமை புதுமை கொண்ட எந்தன் தேசம் !
பேசும் புகழ் பேசும்
புவனமெல்லாம் அதன் புகழ் பேசும் !

பாரதமே எந்தன் பாரதமே - உனைப்
போற்றிடவே இந்தப் பா...ரதமே !


                                                                                (தேசம்)

 சரணம் 1:

சித்தனைக் கண்டது புத்தனைக் கண்டது
தத்துவம் சொன்னது எந்தன் தேசம் !
யுத்தமும் கண்டது வெற்றியைக் கொண்டது
ரத்தமும் சிந்திய எந்தன் தேசம் !

காலங் காலமாய் காத்துவரும் - நல்
பண்புகள் கொண்டது எந்தன் தேசம் !
ஆலயங்கள் பல அரண்மனைகள் உண்டு
சரித்திரம் சொல்லிடும் எந்தன் தேசம் !

சரித்திரம் சொல்லிடும் எந்தன் தேசம் !
                                                                                (தேசம்)
 

சரணம் 2:

வானத்தில் கோள்களை ஏவிய நாள்களில்
விண்ணைத் தொட்டது எந்தன் தேசம் !
கணிப்பொறி ஏற்கும் கட்டளை இடுவதில்
வித்தைகள் கொண்டது எந்தன் தேசம் !

இனிவரும் நாளில் இன்னொரு கோளில்
இல்லங்கள் அமைத்திடும் எந்தன் தேசம் !
அறிவினிலே செயல் புரிவதிலே - தனிப்
பெருமைகள் கொள்ளும் எந்தன் தேசம் !

பெருமைகள் கொள்ளும் எந்தன் தேசம் !
                                                                                (தேசம்)
 

உதயகுமார் ஜே.ஆர்.

காலம் பார்த்து

எனது மூத்த நண்பர் செல்வராஜ்குமார் தூத்துக்குடி வானொலிக்காக என்னிடம் ஒரு பாடல் எழுதச் சொன்னார். எழுதியபின் அவர் மெட்டமைத்து
வயலும் வாழ்வும் நிகழ்ச்சியில் தொண்ணூறுகளில் ஒலிபரப்பானது இந்தப் பாடல்!


காலம் பார்த்து நேரம் பார்த்து நாத்துநட்டு பாத்திகட்டி
தண்ணிய ஊத்தி வளர விட்டு காத்துப்பாரு - பயிர்
விளஞ்சி வந்து களஞ்சியமே நிரம்பிடும் பாரு
சந்தோஷம் கொண்டாட வழிபொறந்திடும் பாரு

                                                                                  (காலம் பார்த்து)

சரணம் 1:

நாட்டுக்குள்ள தரிசையெல்லாம்
நஞ்சைகளா மாத்தணுங்க
ஆத்துத்தண்ணி அளந்தெடுத்து
நிலத்துக்கெல்லாம் திருப்பணுங்க

நிலத்திலெல்லாம் பயிர்வளர்த்து செழிக்க விடணுங்க - இங்க
தரிசான இடத்தையெல்லாம் ஒழித்து விடணுங்க!

அது நடந்துவிட்டா பாலையெல்லாம் சோலைகளாகும்!
வரும் காலத்திலே பஞ்சமெல்லாம் பறந்தே போகும்!

                                                                                  (காலம் பார்த்து)

சரணம் 2:

தானியங்கள் காய்கறிகள்
நாளுக்குநாள் விளஞ்சிவந்தா
விலைவாசி குறைஞ்சிடுங்க
வாழ்க்கைத்தரம் உசந்துடுங்க

உலகத்துக்கே நம்நாடு வழியைக்காட்டணும் - இந்த
உலகத்துல நம்நாடு ஓங்கி வளரணும்!

இது நடந்துவிட்டா பூமி ஒரு சொர்க்கமாகும் !
நலம் பெறுவதெல்லாம் மாமனித வர்க்கமாகும்!

                                                                                  (காலம் பார்த்து)

* * * * *

ஒவ்வொரு சரணம் பாடும் போதும், ஒவ்வொரு வாத்தைக்குப்பின் ஹோய்... ஹோய்... என்ற கோரஸ் இந்தப் பாடலுக்கு அழகு சேர்த்தது!

அந்தச் சரணம் என் மனதில் ரீங்காரமிடுகிறது....

நாட்டுக்குள்ள ஹோய்... ஹோய்...  தரிசையெல்லாம் ஹோய்... ஹோய்...
நஞ்சைகளா ஹோய்... ஹோய்...  மாத்தணுங்க ஹோய்... ஹோய்... 

பாடலைப் பத்திரமாக வைத்திருக்க முடிந்தது. பாடலின் ஒலிப்பதிவுதான் என்னிடமில்லை!


-உதயகுமார் ஜே.ஆர்.

முதல் பாடல்


என் மூத்த நண்பர் அண்ணன் செல்வராஜ்குமாரும் நானும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்தோம். 


அந்த நிறுவனத்தின் குடியிருப்பில் நிறைய சங்கங்கள் இருந்தன. அவர் அங்குள்ள கலாச்சாரக் குழுவின் பிரதான இசைக்கலைஞர்களில் ஒருவராக இருந்ததால், அதன் நிகழ்ச்சிகளில் இசையமைப்பது அவரும் அவருடைய குழுவும் தான்.

காலை, மதியம் மற்றும் இரவுப் பணிநேரம் என மூன்று மாற்று முறைகள் நடைமுறையில் இருந்த அங்கு, ஒருநாள் இரவுப் பணியில் அவரும் நானும் வந்து அமர்ந்தோம்.

இரவுப் பணியில் அவ்வப்போது செய்யவேண்டிய வேலைகளை செய்தபின் கிடைக்கும் மிச்ச நேரத்தில், சிலர் தொழில்நுட்பப் புத்தகங்கள் படிப்பதுண்டு.
பகுதிநேரப் படிப்பு மேற்கொண்டவர்கள் படிப்பதும் குறிப்பெடுப்பதுமாக இருப்பர். இரவு நேரமல்லவா? நேரமும் போகவேண்டும் ஆனால் அது பயனுள்ள வகையில் போகவேண்டும்.

கட்டுப்பாட்டு அறைக்கு வெளியிலிருந்து, 'ஜோ' வென்ற மெல்லிய சத்தம் உள்ளே ஊடுருவிக் கொண்டிருக்க அந்த இரவின் நிமிடங்கள் நகர்ந்து கொண்டிருந்தபோது, மெதுவாக தன் கைப்பையிலிருந்து ஒரு நோட்டுப்புத்தகத்தை எடுத்து விரித்தார் அண்ணன் செல்வராஜ்குமார்.

அதில் இசைக்குறிப்புகள் எழுதப்பட்டிருந்தன. சமீபத்தில் வெளியான பாடலுக்கு இசைக்குறிப்புகளை மெதுவாக அழுத்தந் திருத்தமாக எழுதத் தொடங்கினார்.

அவ்வப்போது அந்தப் பாடலின் மெட்டை முணுமுணுத்துக் கொண்டே விரல்களை விட்டு எண்ணியபடி இருந்தார்.

அவர் இசைக்குழுவின் ஒரு பிரதான உறுப்பினர் என்பதை நான் அறியாத நேரம் அது.

அப்போது ஒரே மேஜையில் அருகருகே அமர்ந்திருந்த எங்களுக்குள் நடந்த சிறு உரையாடல்:

நான், "அண்ணே, நோட்ஸ் எல்லாம் எழுதுறீங்க. மியுசிக் கத்துக்கிறீங்களா?"

அதற்கு அவர், "தம்பீ. பாட்டுக் கச்சேரிக்கு போயிருக்கியா?"

"ஆமா போயிருக்கேன்".

"கீ போர்டு கிடார் வாசிக்கிறவங்க இதை வச்சித்தான் வாசிப்பாங்க".

"அப்போ நீங்க கீ போர்டு வாசிப்பீங்களா?"

"அட என்னப்பா நீ...  நம்ம கச்சேரிக்கு வர்றியா? அடுத்த வாரம் ஜிம்கானாவுக்கு வா!"

அப்போது தான் இவர் கச்சேரியில் கீ போர்டு வாசிப்பவர் என்று தெரிந்துகொள்கிறேன்.

அந்த தருணத்தில் நான் பத்திரிகைகளில் சில கட்டுரைகள் கவிதைகள் எழுதியிருப்பதாக மெதுவாக ஆரம்பித்தேன்.

அவர், "ஏ கவிதை எல்லாம் எழுதுவியா? அப்போ பாட்டு?"

அதற்கு நான், "பாட்டு....இதுவரைக்கும் எழுதினதில்ல. ஆனா முயற்சி பண்ணலாம்"

"எங்கே ஒரு பாட்டு எழுது பார்க்கலாம்."

நான் தயங்கிக் கொண்டே, "மெட்டுப் போடுவீங்களா? ஒரு மெட்டுக் குடுத்தா சுலபமா இருக்கும். எதைப்பத்தி எழுதுறது?"

"நீ மொதல்ல எழுது. எதைப்பத்தி வேணும்னாலும் எழுது. பார்க்கலாம்".

நான் சிந்திக்க ஆரம்பித்தேன். இது ஓர் அழகான பரீட்சை. எனக்கு என்ன தெரியும் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்.

இயற்கையைப் பற்றி எழுதினால் என்ன? மனதில் காட்சிகள் விரிகின்றன.

எழுத ஆரம்பித்தேன்.

சோலைப் பூக்களைத் தென்றல் தாலாட்டும் - பொன்
மாலை வேளையில் நிலவு முகம் காட்டும் - இந்தக்
காலம் நமதாகும் - இயற்கைக்
கோலம் இனிதாகும்

அந்தத் தாளை அவருக்குத் தெரியுமாறு அவர் பக்கம் நகர்த்தினேன்.

படித்துப் பார்த்து விட்டு, "நல்லா எழுதியிருக்கியே...இதைப் பல்லவியா வச்சிக்கலாம்".
மெதுவாக மெட்டுப் போட்டுப் பார்த்தார்,

மேஜையில் இலேசாகத் தாளம் போட்டுக்கொண்டே, "ஏ தம்பி! அப்படியே சரணம் இன்னும் ரெண்டு பத்தி எழுது! "

நடந்து கொண்டே மனதில் காட்சி விரித்துக் கொண்டேன். ஒவ்வொரு வரியாக மனதில் தோன்றத் தோன்ற கோர்வைப் படுத்திக்கொண்டே வந்தேன்.

நடந்துகொண்டே மிதந்துகொண்டு இருந்தேன்.

அந்த இரவிலேயே அந்தப் பாடலை எழுதி முடித்தேன்.


அதுதான் இந்தப் பாடல்: முதல் பாடல் !


-உதயகுமார் ஜே.ஆர்.

சோலைப் பூக்களை

சோலைப் பூக்களைத் தென்றல் தாலாட்டும் - பொன்
மாலை வேளையில் நிலவு முகம் காட்டும் - இந்தக்
காலம் நமதாகும் - இயற்கைக்
கோலம் இனிதாகும்!

குடைவிரித்து நின்றமரம் தலையசைக்கும்
குருவிகளின் கூட்டம் வரச் சம்மதிக்கும்
பாய்ந்துவரும் நதியலையோ சலசலக்கும்
பாறைமீது மோதியபடி கலகலக்கும்

காலம் நமதாகும் - இயற்கைக்
கோலம் இனிதாகும்!

இரைதேடிய பறவைகள் நம் அறைதேடும்
கரைதேடிய நதியலைகள் விரைந்தோடும்
உயரவளர்ந்த தென்னையதில் முகம்பார்க்கும்
இரவுவர வானம் தன் விளக்கணைக்கும்

காலம் நமதாகும் - இயற்கைக்
கோலம் இனிதாகும்!

குனிந்தபுல் நிமிர்ந்துபார்க்கக் காற்றடிக்கும்
நிமிர்ந்துவிட்டு நிலவைப்பார்த்துக் குனிந்துவிடும்
மறைந்து மறைந்து மீண்டும் நிலவு தோன்றிவிடும்
மலர்ந்துவிட்ட அல்லிமலர் வெட்கப்படும்

காலம் நமதாகும் - இயற்கைக்
கோலம் இனிதாகும்!


-உதயகுமார் ஜே.ஆர்.